தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களே!
---------------------------------------------------------------------------
தனித்துப் போட்டியிடுவது என்று முடிவெடுத்து அதை அறிவித்தும் விட்டீர்கள். ஆகவே எனக்குத்தெரிந்த நியாயம் என்ற வகையில் சில விபரங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
இந்தியாவின் பிரதமராகி நாட்டை தலைகீழாக மாற்றி சாதனை மனிதராக ஆகவேண்டும் என்பது நிச்சயமாக தங்களின் கனவாக இருக்காது என்று நம்புகிறேன். தமிழ் நாட்டில் கூட எந்த மாற்றமும் ஏற்படுத்த முடியாது என்பது வேறு விஷயம்.அதற்கான வாய்ப்புகள் எம்ஜியாருக்கும்,ஜெயலலிதாவுக்கும் கிடைத்தும் கூட அவர்கள் இருவராலும் சாதிக்க இயலவில்லை. அதைப்பற்றிய அலசல்களை வேறு ஒரு சந்தர்ப்பத்தி்ல் விவாதிப்போம்.
இப்பொழுது நடக்க இருப்பது நாடாளுமன்றத்தேர்தல். இதில் களமிறங்கி இருக்கும் அகிலஇந்திய அணிகளில் ஏதேனும் ஒரு அணியில் இணைந்து போட்டியிடுதலே சரியான ராஜதந்திரமாக இருக்கும். அல்லது தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்த அரசுகளால் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாத மக்களாளும்,சமுதாயங்களாளும் தோற்றுவிக்கப்பட்டு வலுவாக இயங்கிக்கொண்டிருக்கும் அரசியல் சமுக இயக்கங்களையும் ஓரணியில் திரட்டி ஒரே அணியாக தேர்தலில் நின்றால் மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான அணியாக, வெற்றி வாகை சூடும் அணியாக நிச்சயம் இருந்திருக்கும். அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டீர்கள்.
மேலும் சில ஆயிரம் வோட்டுக்களை பிரிப்பதின் மூலம் யார் வெற்றி பெறக்கூடாது என்று நீங்களும்,மாற்றத்தை விரும்புகிறவர்களும் நினைக்கிறீர்களோ அவர்களே வெற்றி பெற்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
மேலும் தனித்து நின்றுதான் நான் வெற்றி பெறுவேன் என்று எவ்வளவு காலத்திற்கு நீங்கள் அரசியல் கட்சி நடத்துவீர்கள்? இல்லை, உங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் மகாத்மா காந்திகளா?எங்கெல்லாம் பதவி கிடைக்குமோ அங்கிருந்து அரசியல் பண்ணுவதுதான் இன்றய அரசியல் கணக்கு என்பது உங்களுடன் இருப்பவர்களுக்கும் தெரியும்.
மேலும் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தி சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தாமல் போனாளும் அந்த தொகுதியில் இருக்கும் உங்கள் கட்சிக்காரன் யாருக்கு வாக்களிப்பான்? நிச்சயமாக தொகுதி மாறி வாக்களிக்க முடியாது. ஏதோ ஒரு கட்சி அல்லது அணிக்கு ஓட்டளிக்கத்தானே போகிறார்கள்? அப்படியானால் ஏன் இப்பொழுதே ஏதேனும் ஒரு அணியில் இணைந்து பணியாற்றக்கூடாது?கிடைக்கும் வாய்ப்புகளை பயன் படுத்தி மத்தியில் சில அமைச்சர் பதவிகளைப்பெற்று அதன் மூலமாகவும் தமிழ்நாட்டிற்கு நன்மைகள் செய்யலாமே?
மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்தால் நிச்சயமாக முடியும். அதற்குத்தேவை கூடவே விவேகமும்,சாணக்கியமும்.
வாழ்த்துக்கள்!!!