அம்மா....அம்மா...(இரண்டு பேர்)
ஜெயலலிதாவைப் பற்றியும்,சோனியா காந்தியைப் பற்றியும் எழுதப்படும் இடுகையல்ல. மன்னிக்கவும்... என்னைப் பெற்ற அம்மாவைப் பற்றியும்,நான் பெற்ற அம்மாவைப் பற்றியும் நினைத்துப் பார்த்து பெருமிதம் கொள்ளும் தருணங்களை பகிர்ந்து கொள்ளும் நேரம்.
எல்லோரும் வருடத்தில் ஒரு நாள் நினைவு கொள்ளும் தாயார் தினத்தில் அனைத்து நாட்களையும் தாயார் தினமாக நினைக்கும் என்னைப்போன்ற நண்பர்களுக்கு இது அர்ப்பணம்.
முதலில் என்னைப் பெற்ற அம்மா.......
முதன் முதலில் பெற்ற பெண் குழந்தையின் மரணம்... அடுத்து ஒரு பெண் குழந்தை... மூன்றாவதாகவும்,முதல் ஆண் குழந்தையாகவும் என்னைப் பெற்றெடுத்த அவர்கள் எவ்வளவு மகிழ்திருக்க வேண்டும்?அந்த மகிழ்ச்சியான தருணங்கள் எதுவும் இறைவன் அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். காரணம், ஒவ்வொரு நாளும் நான் செத்துப் பிழைத்தவன்.காய்ச்சலில் ஆரம்பித்து வலிப்பு வரை சென்று பேச்சு மூச்சற்றுக் கிடந்த நாட்கள் ஏராளம்.
நாட்டு வைத்தியன் கூட இல்லாத கிராமம் இருமேனி, சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சாலை உள்ள ஊர் உச்சிப்புளி. வீட்டில் இருந்து மண்அடர்ந்த பாதையில் ஓட்டமும் நடையுமாகச் சென்று அங்கே காத்திருந்து பேருந்து பிடித்து சுமார் ஒரு மணி நேரம் பயணித்து இராமநாதபுரம் நகரத்தில் இறங்கி குதிரை வண்டி பிடித்து மருத்துவமனை வந்து சேர்வதற்குள் விரைத்துப் போயிருக்கும் பிள்ளையை சுமந்த ஒரு தாயின் வலி எப்படி இருந்திருக்கும்? இது மாதிரியான அனுபவங்கள் ஒரு முறையல்ல...ஒன்பது முறையல்ல... எனக்கு ஐந்து வயதாகும் வரை இப்படியான சோதனைகள் என் அம்மாவுக்கு பல தடவைகள் நடந்திருக்கின்றன.தந்தை வெளிநாட்டில் பஞ்சம் பிழைக்க,பெரிய படிப்பரிவில்லாத கால கட்டத்தில் அம்மாவின் தாய்மையும்,பிள்ளையை எப்படியும் பிழைக்க வைக்க வேண்டும் என்ற வெறியும்,அதற்காக அவர்கள் பட்ட வேதனையையும் எந்த வார்த்தைகளிலும் விவரிக்க முடியாது என்றே எனக்குப் படுகின்றது. வேண்டுமானால் அம்மாவைப் போன்ற இன்னொரு பெண்ணால் மட்டுமே அதை உணர முடியம்.
அம்மாவைப் பற்றி எழுதுவதற்கு ஆயிரம் செய்திகள் இருக்கின்றன. அவ்வப் பொழுது அதை எழுதுவேன்.இந்த ஒரு செய்தி மடடுமே போதும் ஆயுள் முழுதும் நான் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டவன் என்பதை உணர்த்த.
எனக்குப் பிறகு அம்மாவுக்கு இன்னும் இரண்டு ஆணும்,இரண்டு பெண் பிள்ளைகளும் பிறந்தார்கள். ஆனாலும் பத்து வயது வரை அம்மாவின் செல்லப்பிள்ளை நான்தான்.
இதை எதுவும் புரிந்து கொள்ளாத, அல்லது இப்படியே விட்டு விட்டால் பிள்ளை கெட்டு விடுவான் என்ற நன்னோக்கில் பத்து வயது ஆகும் பொழுது குருகுலத்திற்கு அனுப்பப்பட்டு வேத பாடசாலையில் சேர்க்கப்பட்டேன்.
என்னைப் பிரிந்த அம்மா... அம்மாவைப் பிரிந்த நான்... யாருடைய துயரம் பெரியது என்று பெரிய பட்டிமன்றம் வைத்தாலும் முடிவு சொல்ல முடியாதளவு வேதனை. ஓன்பது வருடங்கள். வருடத்தில் இரண்டு மாதம அம்மாவுடன். பத்து மாதங்கள் பிரிவின் துயரில்.
இது அம்மாவுக்கும் மகனுக்குமாக உறவையும், அன்பையும் மேலும் பலப்படுத்தின.
அதன் பிறகும் அடுத்த பிரிவுக்கு என்னை தயார் படுத்தினேன்.வெளிநாட்டிற்குச் சென்று சம்பாதித்து அம்மாவை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆவலில் மீண்டும் அம்மாவு்க்கு வேதனையை அளித்தேன்.
அடுத்து ஒரு எட்டு வருடங்கள் வெளிநாட்டில் வேலை. திரும்பி வந்து ஒரு வருடம் மட்டும் அம்மாவுடன் இருந்து விட்டு,வேறு ஒரு நாட்டிற்கு ஓட்டம். அம்மா....அம்மா என்று மனது கதறித்துடிக்க, என் மகன்...என் மகன் என்று கதற.... வாழ்க்கை மிக வேகமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. இடைப்பட்ட காலங்களில் ஒரு மகனாக நான் ஆற்ற வேண்டிய கடமை களில் ஓரளவு மனத் திருப்தி தரும் வகையில் நடந்து கொண்டேனா இல்லையா என்பதை நான் சொல்ல முடியாது. அம்மாவும், மற்றவர்களும்தான் அதை சொல்ல வேண்டும்.
என்ன தவம் செய்தேன் இறைவா! என் அம்மாவை எனக்கு கிடைக்கச் செய்தாயே உனக்கே எல்லாப் புகழும்.
நான் பெற்ற அம்மாவைப் பற்றி அடுத்து எழுதுவேன்.
1 கருத்து:
kalakitenga ponga........
கருத்துரையிடுக